Trinity

19th Sunday after Trinity

Text cycle 1

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Isaiah 44:22-28

44:22 உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்.

44:23 வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; ஆண்டவர் இதைச் செய்தார்; மண்ணுலகின் அடித்தளங்களே, ஆர்ப்பரியுங்கள்; மலைகளே, காடே, அங்குள்ள அனைத்து மரங்களே, களிப்புற்று முழங்குங்கள்; ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டருளினார்; இஸ்ரயேலில் அவர் மாட்சி பெறுகிறார்.

44:24 கருப்பையில் உன்னை உருவாக்கிய உன் மீட்பரான ஆண்டவர் கூறுவது இதுவே: அனைத்தையும் படைத்த ஆண்டவர் நானே; யார் துணையுமின்றி நானாக வானங்களை விரித்து மண்ணுலகைப் பரப்பினேன்.

44:25 பொய்யர் சொல்லும் குறிகள் பலிக்காதவாறு செய்கின்றேன்; மந்திரவாதிகளை மடையராக்குகின்றேன்; ஞானிகளை இழிவுறச் செய்து அவர்களது அறிவு மடமையெனக் காட்டுகின்றேன்;

44:26 என் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றேன்; என் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றேன்; எருசலேமை நோக்கி, ‘நீ குடியமர்த்தப் பெறுவாய்’ என்றும் யூதா நகர்களிடம், ‘நீங்கள் கட்டியெழுப்பப் பெறுவீர்கள்’ என்றும் அவற்றின் பாழடைந்த இடங்களைச் சீரமைப்பேன்’ என்றும் கூறுகின்றேன்.

44:27 ஆழ்நீர்த்தளங்களைப் பார்த்து, ‘வற்றிப்போ; உன் ஆறுகளை உலர்ந்த தரையாக்குவேன்’ என்றும் உரைக்கின்றேன்.

44:28 சைரசு மன்னனைப்பற்றி, ‘அவன் நான் நியமித்த ஆயன்; என் விருப்பத்தை நிறைவேற்றுவான்’ என்றும், எருசலேமைப்பற்றி, ‘அது கட்டியெழுப்பப்படும்’ என்றும், திருக்கோவிலைப்பற்றி, ‘உனக்கு அடித்தளம் இடப்படும்’ என்றும் கூறுவதும் நானே.

Epistle

Ephesians 4:22-28

4:22 எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள்.

4:23 உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும்.

4:24 கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.

4:25 ஆகவே, பொய்யை விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள். ஏனெனில், நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம்.

4:26 சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்.

4:27 அலகைக்கு இடம் கொடாதீர்கள்.

4:28 திருடர் இனித் திருடாமல் இருக்கட்டும். மாறாக, தேவையில் உழல்வோருக்குப் பகிர்ந்து கொடுக்கத் தங்களிடம் பொருள் இருக்கும் வகையில், தாங்களே தங்கள் “கைகளால் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும்.

Gospel

Mark 2:1-12

2:1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.

2:2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.

2:3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.

2:4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே, அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.

2:5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

2:6-7 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.

2:8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?

2:9 முடக்குவாதமுற்ற இவனிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்பதா? எது எளிது?

2:10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே, அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,

2:11 “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.

2:12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.