திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் இருபத்தைந்தாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 51:12-16

51:12 உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர் நானேதான்! மடிந்து போகும் மனிதருக்கும் புல்லென மாயும் மானிடருக்கும் நீ அஞ்சுவது ஏன்?

51:13 உன்னை உருவாக்கிய ஆண்டவரை நீ ஏன் மறந்துவிட்டாய்? வானங்களை விரித்துப் பரப்பியவரும், மண்ணுலகிற்கு அடித்தளமிட்டவரும் அவர் அன்றோ? உன்னை ஒடுக்கி அழித்துவிட முயன்றவன் சீற்றத்தை முன்னிட்டு நீ ஏன் எந்நாளும் ஓய்வின்றி நடுங்குகிறாய்? உன்னை ஒடுக்கியவனின் சினம் எங்கே?

51:14 கூனிக் குறுகியவன் விரைவில் விடுதலை பெறுவான்; அவன் குழியில் செத்து வீழ்வதில்லை; அவனுக்கு உணவு இல்லாமல் போகாது.

51:15 உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! கடலைக் கலக்கி அலைகளைக் கொந்தளிக்கச் செய்பவர் நானே! ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம்!

51:16 நான் வானங்களை விரித்துப் பரப்பினேன்; மண்ணுலகிற்கு அடித்தளம் அமைத்தேன்; சீயோனை நோக்கி, “நீ என் மக்கள்” என்றேன்; என் சொற்களை உன் நாவில் அருளினேன்; என் கை நிழலில் உன்னை மறைத்துக்கொண்டேன்.

திருமுகம்

தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 தெசலோனிக்கேயர்) 4:13-18

4:13 சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.

4:14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

4:15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே; ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.

4:16 கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்.

4:17 பின்னர், உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.

4:18 எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.

நற்செய்தி

மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 24:15-28

24:15 “இறைவாக்கினர் தானியேல் உரைத்த, ‘நடுங்கவைக்கும் தீட்டு’ திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். — அப்பொழுது இதைப்படிப்பவர் புரிந்துகொள்ளட்டும்.—

24:16 யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.

24:17 வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்கித் தம் வீட்டிலிருந்து எதையும் எடுக்காது ஓடட்டும்.

24:18 வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வரவேண்டாம்.

24:19 அந்நாள்களில் கருவுற்றிருப்போர் பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்!

24:20 குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.

24:21 ஏனெனில், அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப்போவதில்லை.

24:22 அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது. எனவே, தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார்.

24:23 அப்பொழுது யாராவது உங்களிடம், ‘இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார்’ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம்.

24:24 ஏனெனில், போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள்.

24:25 இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.

24:26 ஆகையால், எவராவது உங்களிடம் வந்து, ‘அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார்’ என்றால் அங்கே போகாதீர்கள்; ‘இதோ, உள்ளறையில் இருக்கிறார்’ என்றால் நம்பாதீர்கள்.

24:27 ஏனெனில், மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல மானிட மகனின் வருகையும் இருக்கும்.

24:28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.”