திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் மூன்றாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 57:15-19

57:15 உயர்ந்தவரும் உன்னதரும் காலம் கடந்து வாழ்பவரும், ‘தூயவர்’ என்ற பெயரைக் கொண்டவரும் கூறுவது இதுவே: உயர்ந்த தூய இடத்தில் நான் உறைகின்றேன்; நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்; நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்.

57:16 ஏனெனில், என்றென்றும் நான் குற்றஞ்சாட்டமாட்டேன்; எப்பொழுதும் சினம் கொண்டிருக்கமாட்டேன்; ஏனெனில், நான் தோற்றுவித்த உயிர் மூச்சாகிய மனித ஆவி என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும்.

57:17 பேராசை என்னும் தீமையை முன்னிட்டு நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து, அவனை அடித்து நொறுக்கினேன்; சீற்றம் கொண்டு என்னை அவனுக்கு மறைத்துக் கொண்டேன்; அவனோ என்னைவிட்டு விலகி மனம்போன போக்கிலே சென்றான்.

57:18 அவன் சென்ற பாதைகளைக் கண்டேன்; ஆயினும் அவனைக் குணமாக்குவேன்; அவனை நடத்திச் சென்று அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளிப்பேன்.

57:19 அவனுக்காக அழுவோரின் உதடுகளில் நன்றி ஒலி எழச்செய்வேன்; அமைதி! தொலையில் இருப்போருக்கும் அருகில் இருப்போருக்கும் அமைதி! என்கிறார் ஆண்டவர். அவர்களை நான் நலமடையச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.

திருமுகம்

பேதுரு எழுதிய முதல் திருமுகம் (1 பேதுரு) 5:6-11

5:6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.

5:7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.

5:8 அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.

5:9 அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?

5:10 எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.

5:11 அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.

நற்செய்தி

லூக்கா நற்செய்தி (லூக்கா) 15:1-10

15:1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.

15:2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.

15:3 அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:

15:4 “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?

15:5 கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்;

15:6 வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில், காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.

15:7 அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

15:8 “பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?

15:9 கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில், காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.

15:10 அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”