எசாயா (ஏசாயா) 60:1-6 அல்லது யோபு 28:12-28
எசாயா (ஏசாயா) 60:1-6
60:1 எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!
60:2 இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!
60:3 பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.
60:4 உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.
60:5 அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்.
60:6 ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
யோபு 28:12-28
28:12 ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?
28:13 மனிதர் அதன் மதிப்பை உணரார்; வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.
28:14 ‘என்னுள் இல்லை’ என உரைக்கும் ஆழ்கடல்; ‘என்னிடம் இல்லை’ என இயம்பும் பெருங்கடல்.
28:15 தங்கத்தைக் கொடுத்து அதைப் பெறமுடியாது; வெள்ளியால் அதன் விலையை நிறுக்க இயலாது.
28:16 ஓபீர்த் தங்கமும் கோமேதகமும் அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!
28:17 பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா; பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.
28:18 மணியும் பவளமும் அதற்கு இணையில்லை; மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.
28:19 எத்தியோப்பிய புட்பராகம் அதற்கு இணையல்ல; பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.
28:20 அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்? எங்குள்ளது அறிவின் உறைவிடம்?
28:21 வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும் ஒளிந்துள்ளது; வானத்துப் பறவைகளுக்கும் மறைவாய் உள்ளது.
28:22 படுகுழியும் சாவும் பகர்கின்றன; அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது;
28:23 அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்; அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!
28:24 ஏனெனில், வையகத்தின் எல்லை வரை அவர் காண்கின்றார்; வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.
28:25 காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது, நீரினை அளவையால் அளந்தபோது,
28:26 மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது, இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,
28:27 அவர் ஞானத்தைக் கண்டார்; அதைப்பற்றி அறிவித்தார்; அதை நிலைநாட்டினார்; இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.
28:28 அவர் மானிடர்க்குக் கூறினார்; ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்; தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.